வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம். அதிசயம் என்றும் போற்றுகிறோம் . அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுப்பட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா? இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள்.தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள்.
நூல் வெளி
முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்; சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன். அவரது காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புப் புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து ஜெயகாந்தம் என்னும் நினைவு இதழ் உருவாக்கப்பட்டுள்ளது.
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன. யாப்பின் உறுப்புகள் குறித்து கடந்த ஆண்டில் கற்றதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
பாக்களுக்கு உரிய ஓசைகளைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம். பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.
செப்பல் ஓசை
செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.
அகவல் ஓசை
அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.
சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.
துள்ளல் ஓசை
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.
தூங்கல் ஓசை
தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.
முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.
பா வகைகள்
குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.
குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.
அலகிடுதல்
செய்யுளின் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பதை முன் வகுப்பில் அறிந்துள்ளோம்.
அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்.
'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி கண்ணதாசன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
'முத்தையா' என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.
நம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்ட கவிதை தி.சொ.வேணுகோபாலனின் 'கோடை வயல்' என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்; 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு மீட்சி விண்ணப்பம்.