வானுயர்ந்த கட்டடங்களைப் பார்த்து வியக்கிறோம். அதிசயம் என்றும் போற்றுகிறோம் . அதை உருவாக்க உழைத்தவர், வியர்த்தவர், இடுப்பொடியப் பாடுப்பட்டவர்களை நினைத்ததுண்டா? அந்த ஏழைகளின் துயரை, ஏங்கிடும் அவர் வாழ்வை அவர்களின் பசிக்குறி முகங்களை நொடியேனும் நினைப்பதுண்டா? இன்னலிலே இருக்கும் தொழிலாளர்கள் நிலையைக் கவிஞர்கள் நினைக்கிறார்கள்.தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாத செங்கற்களைப் போலவே இருக்கும் கல்மனங்களுக்குள் மனிதத்தைப் புகுத்திவிடுகிறார்கள்.
நூல் வெளி
முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர்ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்; இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கியவர். கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு எனப் பலதளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர். மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பாவை, இலக்கிய வெளிவட்டம், குமுதம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இதுவரை நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலையும் படைத்துள்ளார்.
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமகாலக் கருத்துகளையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் அவர்; சிறுகதை, புதினம், திரைப்படம், முன்னுரை, பேட்டி என எதைத் தொட்டாலும் தனிமுத்திரை பதித்தவர்; இலக்கியத்திற்கான பெரும் விருதுகளை வென்றவர். மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர் ஜெயகாந்தன். அவரது காந்தத் தன்மையுடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புப் புதையலிலிருந்து சில மணிகளைத் தொடுத்து ஜெயகாந்தம் என்னும் நினைவு இதழ் உருவாக்கப்பட்டுள்ளது.